Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் 56 மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பள்ளிக்கு அருகில் உள்ள சுமார் 24 கிராமங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை, ஆலந்தூர் மற்றும் மதுக்கூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனைத் தொடர்ந்து. தஞ்சாவூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் இரண்டு ஆசிரியைகள் மற்றும் ஒரு மாணவிக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் மொத்தமாக 65 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், நாளொன்றுக்கு 200 முதல் 300 பேர் வரை அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறினார்.